tamilnadu

img

இரத்தக் கொதிப்பு

சாதாரணமாக இரத்தக் கொதிப்பு நோயாளிக்கு வரும் அறிகுறிகள் என்ன?

பின் மண்டையில் தலைவலி, தலைசுற்றல், காலையில் படுக்கையை விட்டு எழும்போதே மயக்கத்துடன் இருத்தல், அதிக வருடங்கள் இரத்தக் கொதிப்பு உள்ளவருக்கு நெஞ்சில் ஒருகனம், உடல் சோர்வு, படபடப்பு, தூக்கமின்மை, கண்ணுக்குப் பின்னால் ஒரு அழுத்தம், வேலை செய்யும் போது நெஞ்சில் வலி போன்றவை இருக்கும். ஆனால் 80 சதவிகித நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. அறிகுறிகளும் எந்தவித எச்சரிக்கையுடனும் வருவதில்லை. ஆகவே தான் இரத்தக் கொதிப்பை ‘சைலண்ட் கில்லர்’ (சந்தடியின்றிக் கொல்லும் வியாதி) என்கிறோம்.

இந்நோயை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது எப்படி?

எந்த வயதிலும், ஆண் - பெண் என்று பாராது இரத்தக் கொதிப்பு வரலாம். ஆகவே ஒவ்வொருவரும் இரத்த அழுத்தத்தை வருடத்திற்கு ஓரிரு முறையேனும் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குக் கூட இரத்தக் கொதிப்பு வரலாம். ஆகவே, அவர்களுக்கும் இரத்தக் கொதிப்பு உள்ளதா என்று பார்த்துக் கொள்வது நலம். ஒவ்வொருவரும் அவர்களுடைய பெயரை நினைவில் வைத்துக் கொள்வதைப் போல இரத்த அழுத்த அளவையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அழுத்தம் கூட இருந்தாலும், குறைந்து இருந்தாலும் அதைத் தங்களுடைய குடும்ப டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனால் நாம் நமக்கு வரக்கூடிய, அல்லது இருக்கின்ற வியாதியைப் பற்றிக் கவனத்துடன் இருக்க முடியும். மேலும் நோயாளிக்கு இருதயப் பழுது ஏற்பட்டால் அவசர காலங்களில் பழைய இரத்த அழுத்த நிலையை மருத்துவருக்குத் தெரிவித்து அவரைக் காப்பாற்ற உதவும்.

இரத்தக் கொதிப்பு நோய் வரக் காரணம் என்ன?

இரத்தக் கொதிப்புக்கான உண்மையான காரணங்களில் 7/8 சதவிகிதமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சிறுநீரகக் கோளாறு, மூளை, தைராய்டு, அட்ரீனல் சுரப்பி ஆகியவற்றில் உண்டாகும் கட்டிகள் போன்றவையாகும். பெண்கள், கருவுற்றிருக்கும் பொழுது இரத்த அழுத்தம் அதிகமாகும். இந்தக் காரணங்களுக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, மூலகாரணத்தையும் கண்டுபிடித்து சிகிச்சை செய்ய முடியும். இரத்தக் கொதிப்பு நோய்க்கு, சுமார் 92 சதவீதம் சரியான காரணங்கள் கண்டுபிடிக்க முடியாது, சிலருக்குப் பாரம்பரியம் ஒரு காரணமாக இருக்கும். பெற்றோர்கள் இருவரும் இரத்தக் கொதிப்பு நோய் உடையவர்களாக இருந்தால், அவர்களுடைய குழந்தைகளில் பாதிப்பேருக்கு இரத்தக் கொதிப்பு வர வாய்ப்பு உண்டு. சாதாரணமாக பெண்களுக்குக் குறைந்த சதவிகிதம்தான் இரத்தக் கொதிப்பு வருகிறது. அப்படி வந்தாலும் ஆண்களைவிடப் பெண்கள் நோயை அதிகமாகத் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மாதவிலக்கு நின்ற பின்பு, இரத்தக் கொதிப்பு நோய் அதே வயதை உடைய ஆண்களை விடப் பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது, பாரம்பரியம் இரத்தக் கொதிப்புக்கு ஒரு காரணமாக இருந்தாலும் இந்நோய் வர மற்ற காரணங்களாகச் சொல்லப்படுவன, பருமனாக இருத்தல், உப்பை அதிகமாக உணவுடன் சேர்த்துக் கொள்ளுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சில போதை மருந்துகள் ஆகியவையாகும், இரத்தக்கொதிப்பு வந்துவிட்டால் கவலைப்படாதீர்கள். கடந்த இருபது நூற்றாண்டுகளில் இரத்தக் கொதிப்புக்கான மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். ஆரம்ப காலத்திலேயே நோயைக் கண்டுபிடித்துத் தொடர்ந்து தகுந்த மருத்துவம் பெற வேண்டும். அப்பொழுதுதான் மூளை, இருதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கிய உறுப்புக்களில் வரும் கேடுகளைத் தவிர்க்க முடியும். ஒவ்வொரு நோயாளியும் தனக்குத் தேவையான மருத்துவத்தைக் கொதிப்பு கட்டுப்பட்ட நிலையில் கூட தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இந்நோயினால் வரும் பெருந்தீங்குகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

தடுப்பு முறைக் குறிப்புகள்
பொதுவாக நாம் இரத்தக் கொதிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்ள தினசரி கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள்: (1) உடல் அதிகப் பருமனாக இருந்தால், பருமனைக் குறையுங்கள். (2) உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்ளாது உப்பைக் கட்டுப்படுத்துங்கள் (3) கவலையற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்துங்கள் (4) எந்தக் காரியத்தையும் அவசர அவசரமாகச் செய்யாதீர்கள் (5) ஓய்வு எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். (6) புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை விட்டுவிடுங்கள். (7) நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். (8) தினமும் ஒரு சில மணி நேரம் ஓய்வுடன் இருந்து சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியில் நடப்பதை முறையாக வைத்துக் கொள்ளுங்கள். சில யோகாசனப் பயிற்சியும் செய்வது பயனுள்ளது.

இனி இரத்தக் கொதிப்பு நோய் பற்றி எழும் கேள்விகளை ஆராய்வோம்

1. குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பெண்கள் மாத்திரைகள் சாப்பிடுவது வழக்கம். இவை இரத்தக் கொதிப்பை ஏற்படுத்துமா? ஒரு சில பெண்களுக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படுவது உண்டு. இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கருத்தடை மாத்திரை சாப்பிடும் பெண்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைச் சோதனை செய்து கொள்வது நல்லது.

2. இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் விளையாட்டு ஒரு போட்டியாக இல்லாமல் இருந்தால் நல்லது. இவர்கள் ஒரு காரைத் தள்ளுவதோ அல்லது மிக அழுத்தமாக மூடப்பட்ட கதவு, சன்னல் ஆகியவற்றை மிகுந்த பலத்துடன் திறப்பதோ கூடாது. ஏனெனில், திடீர் என்று உடலுக்கு இப்படி வேலை கொடுப்பது நல்லது அல்ல.

3. வயதானவர்களுக்கு ஒரு சிறிதளவு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்து நோய்க்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாது இருந்தால் அவர்கள் அதற்கு மருந்து உண்ண வேண்டுமா? வேண்டாமா? இதற்கு விடையை மருத்துவரிடமே விட்டுவிடுங்கள், ஆனால் இப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எவ்வித மருந்தும் தேவையில்லை. இதைப்போல் சிலருக்கு அழுத்தம் தினமும் குறைவாக இருந்தால் அது அவர்கள் உடலுக்கு நல்லதுதான். வாழ்க்கை சீராக இருப்பதற்கு அளவுடன் இரத்த அழுத்தம் இருப்பது தேவைதான். சாதாரணமாக இருக்க வேண்டிய அளவு குறைந்து இருந்தாலும் கவலைபடத் தேவையில்லை. மிகக் குறைவாக இருந்து ஏதாவது அறிகுறிகள் வந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.

4. இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாமா? சாதாரணமாக எப்போதும்போல் இருப்பதில் கவலை இல்லை. ஆனால் அதிகமாக ஈடுபாடு இல்லாமல் இருப்பது நல்லது. இரத்தக் கொதிப்பு என்பது நாட்டின் பெரும் சுகாதாரப் பிரச்சனை. பல வழிகளிலே இரத்த அழுத்த உயர்வுக்கு நாம் மருத்துவம் அளித்துக் கொள்ள வேண்டும். அழுத்தம் கொஞ்சம் அதிகமானவுடனேயே கண்டுபிடித்து மருத்துவம் செய்து கொண்டால் வரும் கேடுகளிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் இரவில் சீக்கிரம் தூங்கிவிடுங்கள். மதிய உணவிற்குப் பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஓய்வு எடுப்பதை ஒரு கலையாகக் கற்றுக் கொள்ளுங்கள். உணவுக் கட்டுப்பாட்டுட னும் மருத்துவ ஆலோசனை யுடன் இருந்தால் வளமுடன் வாழ வழி உண்டு.

தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1